சிலருக்கு முகத்தில் ஆங்காங்கு கரும்புள்ளிகள் மற்றும் கருமையான தழும்புகள் இருக்கும். பொதுவாக முகத்தில் இப்படி கரும்புள்ளிகள் வருவதற்கு காரணம், சருமத்தில் மெலனின் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருப்பது தான். அதுமட்டுமின்றி அதிகமாக வெயிலில் சுற்றுவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கர்ப்பம், குறிப்பிட்ட மருந்துகள், வைட்டமின் குறைபாடுகள், தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவையும் கரும்புள்ளிகள் வருவதற்கு காரணங்களாகின்றன. பருக்கள் இல்லாத முகத்தில் ஆங்காங்கு கரும்புள்ளிகள் மட்டும் இருந்தால், அவை ஒருவரின் மனதில் தாம் அசிங்கமாக உள்ளோமோ என்ற எண்ணத்தை உருவாக்கி, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். ஆனால் இப்படி முகத்தில் வரும் கரும்புள்ளிகளை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் எளிதில் மறைக்கலாம்
மோர்

4 டீஸ்பூன் மோரில் 2 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களிடம் மோர் இல்லாவிட்டால் பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி உலர வைத்து, மீண்டும் நீரில் நனைத்த பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம்.
ஓட்ஸ்

1/2 கப் ஓட்ஸ் பொடியுடன் 3-4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
பாதாம்

இரவில் படுக்கும் போது பாலில் 8-10 பாதாமை ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலுரித்து, பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி, அதனை நேரடியாக முகத்தில் வைத்து சில நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இல்லாவிட்டால் உருளைக்கிழங்கை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகள் நீங்கும்.
